நீ வேண்டாம் எனக்கு!!
கோடையில் இதம் தரும்
குளிர் தென்றலாக
நீ வேண்டாமெனக்கு!
வாடையில் சூடேற்ற
என் போர்வைக்குள்ளும்
நீ புக வேண்டாம்!!
மழையின் கூதலில்
ஒதுங்கியே அனுபவிக்கும்
கணப்பாகவும் நீ வேண்டாம்!!
வாழ்வின் வசந்த வாசல்களை
நான் திறந்தே சுகித்திருக்க
நீ என் தனிமையாயிரு,
அது போதும்!!
தோல்வியில் நான்
துவளும் போது எனை
தேற்றி எழுப்பும்
சக்தியாயிரு, அது போதும்!!
வலிகளில் நான் துடிக்கும் போது
எனக்கு மருந்திடும்
மயிலிறகின் நுனியாயிரு,
அது போதும்!!
சாதனைகள் நான் படைக்கும் போது
சபையோரின் பாராட்டுதலில்
என் பார்வைக்கொரு
பெருமிதமாயிரு, அது போதும்!!
காலதேவன் என் கதை முடிக்கவரும்போது
மூடப்போகும் என் விழிகளின்
முன்னால் இரு அது போதும்,
அது மட்டும் போதும்!!!